நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (02) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்ட “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” எனும் நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் பிரதான அங்குரார்ப்பன நிகழ்வு பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் மகிழூர்முனை மண்டபத்தடி வலம்புரி ஆலயத்துக்குக்கு அருகில் இடம்பெற்றது.
இலங்கையின் பல்பரிமாண வறுமையை ஒழிக்கும் பொருட்டு 25000 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தை கொண்டு கிராமிய அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தல் இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துக்கு 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதுடன், மகிழூர்முனை விவசாய வீதி 8.25 மில்லியன் ரூபா பெறுமதியில் கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படவுள்ளது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் குருமண்வெளி-11 கிழக்கு, களுதாவளை – 04 சாந்திபுரம், மற்றும் தேற்றாத்தீவு தெற்கு கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 03 வீதிகளும் செப்பனிடப்படவுள்ளன.
இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி குழு தலைவர்கள், கிராம சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்பொது மகிழூர்முனை மண்டபத்தடி வலம்புரி பிள்ளையார் ஆலய வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.













