குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை அடுத்து, ஈரானியச் சொத்துக்களை வளைத்து, அவற்றைக் வளைகுடா நாடுகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ள போதிலும், இந்த வார இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட நேரடி இராணுவ மோதல்களால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முற்றாக முடங்கியுள்ளன.
ஈரானின் சொத்துக்களை முடக்க அமெரிக்கா வியூகம் வகுத்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள இராஜதந்திரப் பின்னணியை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, ஈரான் இதுவரை வளைகுடா நாடுகளுக்கு ஏற்படுத்திய சேதங்களை மதிப்பிடுமாறு அமெரிக்கத் திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார். எதிர்காலச் சேதங்களை ஈடுசெய்யவும் ஈரானிய சொத்துக்களைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவினால் முடக்கப்பட்டுள்ள தங்களின் 24 பில்லியன் டொலர் சொத்துக்களை விடுவித்தால் மட்டுமே அமைதி ஒப்பந்தம் சாத்தியம் என ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்கா இந்த அதிரடிப் பதில் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் நேற்று அதிகாலை கொடூர மோதல்கள் வெடித்துள்ளன.
ஈரானிய ட்ரோன்களை சுட்டுவீழ்த்திய அமெரிக்கப் படைகள், ஹோர்முஸ் நீரிணையிலுள்ள கோருக் மற்றும் கெஷ்ம் தீவில் அமைந்திருந்த ஈரானிய கடலோர ரேடார் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதற்குப் பழிவாங்கும் வகையில், அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ள குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரானின் புரட்சிகர இராணுவத்தினர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பொழிந்துள்ளனர்.
குடியிருப்புப் பகுதிகள் மீது பாய்ந்து வந்த 7 ஏவுகணைகளைத் தடுத்ததாகக் குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது. இதில் பாரிய பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. பஹ்ரைனில் அபாயச் சங்குகள் ஒலிக்கப்பட்டு மக்கள் அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கையிலும் உலக சந்தையிலும் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ள இந்த மூன்று மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு உள்நாட்டில் கடும் அரசியல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது















