வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் கூட்டத்தில் பங்கேற்ற டஜன் கணக்கான கிராம மக்கள் ஆயுதம் ஏந்திய கொள்ளையர் குழுவினரால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததாவது, ஜம்ஃபாரா மாநிலத்தின் மரடுன் உள்ளாட்சி பகுதியில் அமைந்துள்ள மகாமின் டிட்டி கிராமத்தைச் சேர்ந்த 39 பேர்நேற்றுமுன்தினம் காட்டுப் பகுதியில் நடைபெற்ற சந்திப்பிற்கு சென்றபோது கடத்தப்பட்டனர். எனினும், உள்ளூர் மக்கள் மற்றும் சில அதிகாரிகள் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வரை இருக்கலாம் என கூறுகின்றனர்.
ஜம்ஃபாரா மாநில பொலிஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, கிராம மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தவும், அமைதியை ஏற்படுத்தவும் முயற்சியாக, கொள்ளையர் தலைவரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த முயற்சி மோசமான முறையில் முடிவடைந்து, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் ஆயுதக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலம் பல ஆண்டுகளாக பாதுகாப்பு நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகிறது. “பாண்டிட்ஸ்” என அழைக்கப்படும் ஆயுதக் குழுக்கள் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்துதல், கூட்டுக் கடத்தல்கள், கொ*லைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக விவசாய நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடத்தப்பட்டவர்களை மீட்க பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும், கடத்தல்காரர்கள் கோரும் பணயத் தொகை குறித்து தகவல் தெரிவிக்க சிலரை விடுவித்ததாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பு சவால்களை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.


















