நீர்கொழும்பு, சிறைச்சாலையில் நேற்றைய (05) தினம் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நிலை குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் ஒரு சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளராக ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு, சிறைச்சாலையில் நேற்று பிற்பகல் சுமார் 1:00 மணியளவில் இரு குழுக்களாக இருந்த கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
விசாரணைக் கைதிகள் குழுவிற்கும் தண்டனை பெற்ற கைதிகள் குழுவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மேலும் 34 கைதிகள் காயமடைந்து நீர்கொழும்பு, மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதேநேரம், மோதலில் கடுமையான காயங்களுக்குள்ளான இரண்டு கைதிகள் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலைத் தொடர்ந்து, சிறைக்கைதிகள் குழுவினர் போராட்டத்தை நடத்துவதற்காகக் கட்டிடத்தின் கூரை மீது ஏறினர்; பின்னர், அங்கிருந்து கீழே விழுந்ததில் மேலும் நான்கு கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நீர்கொழும்பு, சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவம் ஆகியவை களமிறக்கப்பட்டன.
அத்துடன் அப்பகுதியைச் சுற்றியுள்ள பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் வழங்கத் தவறிவிட்டதாகக் கூறி, அவர்களது உறவினர்கள் சிலர் சிறை வளாகத்திற்கு வெளியே கூடி ஒழுங்கீனமாக நடந்துகொண்டனர்.
எனினும், பொலிஸாரின் தலையீட்டின் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகள் குறித்த தகவல்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
அத்துடன், மற்றொரு குழுவினரை வைத்தியசாலைக்கு அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.













