மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது ஈரான் வான்வழியாக ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி தாக்குதலைத் தொடுத்துள்ளது.
இருப்பினும், ஈரான் ஏவிய அந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் நடுவானில் வெற்றிகரமாக இடைமறித்துச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்புத் தரப்புத் தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை அடியோடு அழிக்கும் நோக்கில் ஈரான் இந்தத் தாக்குதல்களை ஒருங்கிணைத்துள்ளது.
இதன்படி, ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்கப் படைகள் பயன்படுத்தும் ‘பிரின்ஸ் ஹசன்’ விமானப்படைத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் பல சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதுமட்டுமன்றி, குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள சில முக்கிய அமெரிக்க இராணுவத் தளங்களையும் இலக்காகக் கொண்டு ஈரான் அலை அலையாகத் தற்கொலைப்படை ட்ரோன் தாக்குதல்களையும் முன்னெடுத்துள்ளது.
பிராந்தியத்தில் போர்ச் சூழல் மிக வேகமாக மாறி வருவதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளான கட்டார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தங்களது தேசிய பாதுகாப்பு எச்சரிக்கை மட்டத்தை உச்சக்கட்ட நிலைக்கு உயர்த்தியுள்ளன.
மேலும், ஏவுகணைத் தாக்குதல்களின் அபாயம் நிலவுவதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே வர வேண்டாம் என்றும், பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் பங்கர்களில் இருக்குமாறும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தங்களது குடிமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்களை விடுத்துள்ளன. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் தற்பொழுது போர்க் மேகங்கள் சூழ்ந்துள்ளன.















