வளைகுடாப் பிராந்தியத்தில் நிலவும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் குறித்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடு நீடிப்பதாக தெஹ்ரானின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துவது மற்றும் அதை அமுல்படுத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
செவ்வாய்க்கிழமையன்று (11) அப்பகுதியில் கப்பல்கள் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இது அந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான நம்பிக்கைகளுக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தது.
ஆனால், அது விரைவாகவே முறிந்துபோனது.
ஜூலை 7 அன்று ட்ரம்ப் அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று கூறியதாலும், ஒரு வாரம் கழித்து ஈரானின் வெளியுறவு அமைச்சகம் அது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்ததாலும் இது நிகழ்ந்தது.
முக்கியமான ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துப் பாதையை மீண்டும் திறப்பது தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் உள்ள உடன்படிக்கையை மதிக்கத் தவறியதாக ஈரான் மீது அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குவது மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது உள்ளிட்ட தனது வாக்குறுதிகளை வொஷிங்டன் மீறிவிட்டதாக தெஹ்ரான் கூறுகிறது.
மத்தியஸ்தர்கள் மூலம் விவாதிக்கப்பட்டு வரும் விடயங்களில் ஒன்று, அமெரிக்கா இடைக்கால ஒப்பந்தத்திற்குத் திரும்புவதும், அதன் வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை வரையறுப்பதும் ஆகும்.
இந்த விடயத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஈரானிய வட்டாரம் தெரிவித்தது.
ஹார்முஸ் நீரிணையின் மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாக ட்ரம்ப் புதன்கிழமை கூறினார்.
ஆனால், அந்த நீர்வழியை நிர்வகிப்பதற்காக ஈரான் அமைத்த அமைப்பான பாரசீக வளைகுடா நீரிணை ஆணையம், அது தொடர்ந்து தடுக்கப்பட்டுள்ளதாகவும், ஈரானின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை மீண்டும் திறக்கப்படாது என்றும் கூறியுள்ளது.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, முக்கியமாக ஈரான் மற்றும் லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஓமன், ஜோர்டான், குவைத், இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தம் 60 நாள் காலக்கெடுவை நிர்ணயித்தது (இரு தரப்பு ஒப்புதலுடன் இதை நீட்டிக்கவும் வாய்ப்பிருந்தது).
இந்தக் காலத்திற்குள், தெஹ்ரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் அமெரிக்கத் தடைகளை நீக்குவது தொடர்பான இறுதி ஒப்பந்தத்தை ஈரான் மற்றும் அமெரிக்கா எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த 60 நாள் காலக்கெடுவை நீட்டிக்க ஒப்புக்கொண்டதாகப் பாகிஸ்தான் அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி துருக்கியின் அனடோலு (Anadolu) செய்தி நிறுவனம் புதன்கிழமையன்று வெளியிட்ட செய்தியை ஈரான் தரப்பு வட்டாரம் ஒன்று நிராகரித்தது.
ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையேயான குறுகிய நீர்வழியாகவும், வளைகுடாவின் நுழைவாயிலாகவும் விளங்கும் ஹார்முஸ் நீரிணை , போருக்கு முன்பு உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் ஓட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கையாண்டது.
வளைகுடா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் குறித்த கவலைகள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த மாறிவரும் சமிக்ஞைகளைப் பிரதிபலிக்கும் வகையில், நிலையற்ற வர்த்தகத்துடன், பெப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து ப்ரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால விலைகள் கடுமையாக உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு $126 என்ற உச்சத்தை எட்டின.
இது போருக்கு முந்தைய நிலைகளை விட சுமார் 75% அதிகமாகும்.








