யாழ்.ஊர்காவற்துறை பிரதேசத்தின் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று அதிகாலை பொலிசார் மேற்கொண்டிருந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த சிற்றூர்தியின் சாரதியின் வயது, முன்னதாக 17 என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் சம்பவத்துடன் கைது செய்யப்பட்டிருந்த மேலும் இருவர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று சோதனைக்காக நிறுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட கட்டளையை மீறியதற்காக தெரிவித்து பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, 17 வயது சாரதியே பலத்த காயமடைந்து யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் உயிரிழந்ததாக பொலிசாரினால் தெரிவிக்கப்பட்டது.
ஊர்காவற்துறை பிரிவு பொலிஸ் அதிகாரிகள் அல்லைப்பிட்டி சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமான சிற்றூர்தியொன்றை நிறுத்துமாறு சைகை செய்ததாகவும், ஆனால் அந்த வாகனம் நிறுத்தாமல் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றபோதும் சம்பவம் தொடர்பாக பாரிய சந்தேகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
இதனை தொடர்ந்து மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகரிகளும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை சம்பவத்தின்போது, வாகனத்தின் பயணித்திருந்த மேலும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நல்லுரை சேர்ந்த 25 வயது மற்றும் சித்தன்கேணியைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று நீதவான் விசாரணையின் பின்னர், உயிரிழந்த நபரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், உயிரிழந்த இளைஞன் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் பயன்படுத்தியமை சட்ட வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், மருத்துவ பரிசோதனைகளில் மற்ற சந்தேக நபர்களில் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைப்பற்றப்பட்டிருந்த வாகனம், தடயவியல் உதவியுடன் சோதனை செய்யப்பட்டதில், 17.5 கிராம் கஞ்சா, ஒரு வாள், ஒரு கத்தி, கயிறு மற்றும் விலங்குத் தோல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














