மத்தியகிழக்கின் போர் சூழலுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இடையிலான இராஜதந்திர உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீதான முதற்கட்டத் தாக்குதல்களுக்கு பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தியோகோ கார்சியா (Diego Garcia) உள்ளிட்ட இராணுவத் தளங்களைப் பயன்படுத்த பிரதமர் கீர் ஸ்டார்மர் அனுமதி மறுத்திருந்தார்.
இதனால் அமெரிக்கப் போர் விமானங்கள் பல மணிநேரம் கூடுதலாகப் பயணிக்க வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் பின்னரே, ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீதான ‘தற்காப்புத்’ தாக்குதல்களுக்கு மட்டும் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த ஸ்டார்மர் அனுமதி அளித்தார்.
இந்த விவகாரம் குறித்து ஓவல் அலுவலகத்தில் (Oval Office) செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானியாவின் முடிவு தமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் , “நாம் இப்போது கையாள்வது ஒன்றும் வின்ஸ்டன் சர்ச்சிலை (Winston Churchill) அல்ல எனவும் இது சர்ச்சிலின் காலம் இல்லை” என்றும் டொனால்ட் ட்ரம்ப் ஸ்டார்மரை மறைமுகமாகச் சாடியுள்ளார்.
மேலும், பிரிட்டனின் எரிசக்தி மற்றும் குடிவரவு கொள்கைகளையும் அவர் விமர்சித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஸ்டார்மர், “வான்வெளித் தாக்குதல் மூலம் ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றுவதில் (Regime Change) எமக்கு நம்பிக்கையில்லை” என்று மீண்டும் வலியுறுத்தியதுடன் ஈரானின் பதில் தாக்குதல்கள் பிரித்தானிய மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிய பின்னரே, தற்காப்பு நடவடிக்கைகளுக்காகத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் அவர் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.













