பாகிஸ்தானில் நடைபெற்று வந்த ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளன.
ஈரான் அதிகாரிகளுடன் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance), எவ்வித ஒப்பந்தமும் இன்றி அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
“நாங்கள் எமது இறுதி மற்றும் மிகச்சிறந்த சலுகையை முன்வைத்துவிட்டோம்” என்று அவர் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேற அமெரிக்கா ஒரு சாக்குப்போக்கைத் தேடியதாக ஈரான் தூதுக்குழுவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பேச்சுவார்த்தைகளின் முடிவு எப்படி இருந்தாலும், ஈரானுக்கு எதிரான போரில் வாஷிங்டன் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.
தமது இரு போர்க்கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கடந்ததாக அமெரிக்கா கூறியிருந்த கருத்தை ஈரான் மறுத்துள்ளது.
அத்துடன், அந்த நீரிணை ஊடாக இராணுவக் கப்பல்கள் நுழைய முயன்றால் அதற்கு “கடுமையான பதிலடி” கொடுக்கப்படும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மறுபுறம், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
டெபஹ்தா (Tefahta) நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.













