ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் புதன்கிழமை (15) நம்பிக்கை தெரிவித்த அதேவேளையில், தெஹ்ரான் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால் அதன் மீது பொருளாதார அழுத்தம் அதிகரிக்கப்படும் என்றும் எச்சரித்தது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த கப்பல் போக்குவரத்துத் தடை அமுலுக்கு வந்தபோதிலும், ஹார்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து இயல்பான அளவை விடக் கணிசமாகக் குறைவாக இருந்தபோதிலும், பெப்ரவரி மாத இறுதியில் இஸ்ரேலுடன் அவர் தொடங்கிய போர் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாக நம்புவதாகக் கூறியுள்ளார்.
ஈரான் எரிசக்தி மீதான சில தடைகளை வொஷிங்டன் தளர்த்திய சில வாரங்களுக்குப் பின்னர், மேலதிக பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக சாதகமான நிலையைப் பெறும் வெளிப்படையான முயற்சியாக, ஈரானிய எண்ணெயை வாங்குவோர் மீது கூடுதல் தடைகளை விதிக்கக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகள் எந்தவொரு முன்னேற்றமும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகள் வரும் வார இறுதியில் மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தானுக்குத் திரும்புவது குறித்துப் பரிசீலித்து வந்தனர்.
மோதல் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியாக, மத்தியஸ்தரான பாகிஸ்தான் இராணுவத் தளபதி புதன்கிழமை தெஹ்ரானை சென்றடைந்துள்ளார்.
இந்த நிலையில், ஒரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மேலும், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை பயனுள்ளதாகவும், தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 8 அன்று இரு தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா முறையாகக் கோரியதாக வெளியான செய்திகளை அவர் மறுத்தார்.
மேலும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் அவை மீண்டும் பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்புள்ளது என்று லீவிட் கூறினார்.
அதேநேரம், ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தெஹ்ரான் வந்தடைந்ததை பாகிஸ்தான் இராணுவம் உறுதிப்படுத்தியது.
கடந்த வார இறுதியில் நடந்த பேச்சுவார்த்தைகள், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் முறிந்துபோயின.
இந்தப் போரை ட்ரம்ப், பெப்ரவரி 28 அன்று இஸ்ரேலுடன் இணைந்து தொடங்கினார்.
இது ஈரானின் வளைகுடா அண்டை நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களைத் தூண்டியதுடன், லெபனானில் இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதலையும் மீண்டும் மூட்டியது.















