மட்டக்களப்பில் பெண்கள் கடத்தப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் இந்த வழக்கில் தொடர்புடைய நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வழக்கின் முக்கியத்துவம் கருதி சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, கொள்ளையிடப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஏனைய நான்கு பிரதான சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க அவர் ஆணையிட்டார்.
கடந்த மாதம் 20ஆம் திகதி, கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.
இதேவேளை, உயிருடன் மீட்கப்பட்ட தாயின் 3 வயது குழந்தை வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், வவுணதீவு காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், அவர்களின் உறவினர் மற்றும் நகைகளை வாங்கியவர்கள் எனப் பலரும் கைது செய்யப்பட்டனர்.
26 வயதுடைய பெண், அவரது கணவர் மற்றும் தம்பி ஆகியோர் பிரதான சந்தேகநபர்களாக அடையாளம்காணப்பட்டனர்.
மயக்க மருந்துகளை விநியோகித்தவர் மற்றும் அதனைப் பெற்றுக்கொடுத்த முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் உதவியாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், திருகோணமலை வீதி மற்றும் ஊறணி பகுதியைச் சேர்ந்த இருவர் நகைக்கடை உரிமையாளர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே முச்சக்கர வண்டி சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையோர் தொடர்ந்தும் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.













