இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் (Kalimantan) மாகாணத்தில், ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஏர்பஸ் H130 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மீட்பு அமைப்பின் தலைவர் மொஹமட் ஷாஃபியின் கூற்றுப்படி, ஏப்ரல் 16 ஆம் திகதி காலை, மெலாவியில் உள்ள ஒரு தோட்டப் பகுதியிலிருந்து புறப்பட்ட ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் ஹெலிகொப்டர் ரேடாரில் இருந்து மறைந்துவிட்டது.
பின்னர், தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில், விமானத்தின் வால் பகுதி என்று நம்பப்படும் சிதைவுகளை மீட்புக் குழுவினர் கண்டெடுத்தனர்.
விபத்து நடந்த இடம், சவாலான மலைப்பாங்கான நிலப்பரப்பைக் கொண்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
ஹெலிகொப்டரில் இருந்த எட்டு பேரும் உயிரிழந்ததாக உள்ளூர் மீட்புப் பணித் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.














