ஈரானுடனான போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்படிக்கை எட்டப்படாவிட்டால், அந்த நாடு மீண்டும் கடுமையான இராணுவத் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது அமுலிலுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ளது.
இந்தச் சூழலில், குறித்த காலக்கெடு முடிவதற்குள் ஒரு நிரந்தரமான மற்றும் வெற்றிகரமான உடன்படிக்கையை எட்ட வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
மீண்டும் ஒரு போர்ச் சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், அதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு சாதகமான முடிவை எட்ட முடியும் எனத் தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz ஊடாகப் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க ஈரான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளுக்கு எதிரானது என்பதால், அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் அச்சுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானுடனான ட்ரம்ப்பின் இந்த நேரடி எச்சரிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.















