தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் (முதல் கட்டம்) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (23) ஆரம்பமானது.
இரு மாநிலங்களிலும் இன்று மாலை 6:00 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு, தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவுகள் நடத்தப்பட்டன.
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் இன்று ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில், மேற்கு வங்கத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன.
அதன் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளது.
இது மாநிலங்களினதும் வாக்கு எண்ணும் நடவடிக்கை மே 4 அன்று நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில், 294 சட்டமன்றத் தொகுதிகளுக்காக கட்சிகள் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிடுகின்றன.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, முதல் கட்டத்தில் 152 சட்டமன்றத் தொகுதிகளும், இரண்டாம் கட்டத்தில் 142 தொகுதிகளும் அடங்கும்.
இந்தக் கட்டத்தில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முன்னதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் 5.73 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர் என்றும், அவர்களில் 2,93,04,905 பெண் வாக்காளர்கள், 2,80,30,658 ஆண் வாக்காளர்கள் மற்றும் 7,728 மூன்றாம் பாலின வாக்காளர்கள் அடங்குவர் என்றும் கூறினார்.
மேலும், தபால் மூல வாக்குப் பதிவுகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.
மேலும், பொது வாக்குப்பதிவு நடவடிக்கை முடிந்த பின்னர், அடுத்தகட்ட பணிகள் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக 62 வாக்கு எண்ணும் மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், பாஜக மற்றும் பாமக கூட்டணிகளைக் கொண்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தனது நலத்திட்டங்களை நம்பியிருக்கும் நிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரப் போராடி வருகிறது.
இதனிடையே, நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள விஜய், தனது தமிழக வெற்றிக் கழக (TVK) கட்சியுடன் தேர்தலில் களமிறங்கியுள்ளதால், இப்போட்டி மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.
இது தவிர சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றது.
இதற்கிடையில், மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக ஆட்சியை கைப்பற்ற முயலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், தேர்தல்களில் வலுவான வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைக்க இலக்கு வைத்துள்ள பாஜகவுக்கும் இடையே ஒரு கடும் போட்டி நிலவ உள்ளது.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ச்சியாக நான்காவது முறையாகப் பதவியேற்க இலக்கு வைத்துள்ள நிலையில், கடந்த தேர்தலில் 77 இடங்களைப் பெற்ற பாஜக, மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் புத்துயிர் பெற்று வருகிறது.
இதற்கிடையில், குஜராத்தின் உம்ரேத் மற்றும் மகாராஷ்டிராவின் பாராமதி, ரஹூரி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.
இந்த இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும்.















