இலங்கையில் உள்ள வாகன சாரதிகளை இலக்கு வைத்து, போலியான குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய சைபர் மோசடி குறித்து இலங்கை கணினி அவசரப் பதில் பிரிவு (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
CCTV கேமரா அமைப்புகள் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி, இந்த அதிநவீன பணமோசடி வலையமைப்பு செயற்பட்டு வருவதாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மோசடிக்காரர்கள் தங்களை ‘இலங்கை பொலிஸ்’ அதிகாரிகள் போலக் காண்பித்து, வாகன சாரதிகளின் கைபேசிகளுக்குப் போலியான செய்திகளை அனுப்புகின்றனர்.
அதில், உங்கள் வாகனம் போக்குவரத்து விதியை மீறியுள்ளதாகவும், அதற்கான அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அத்துடன், அந்த அபராதப் பணத்தை ஆன்லைனில் செலுத்துவதற்காக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ “GovPay”தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட ஒரு போலியான இணையதள இணைப்பும் அந்தச் செய்தியில் இணைக்கப்பட்டிருக்கும்.
பொதுமக்கள் அது உண்மையான இணையதளம் என நம்பி, அந்த இணைப்பை கிளிக் செய்து தங்களது விபரங்களை உள்ளிடும் போது பேராபத்து ஏற்படுகின்றது.
இதன் மூலம் வாடிக்கையாளர்களின், அட்டை விபரங்கள் (Credit/Debit Card Details), ரகசிய இலக்கங்கள் , OTP குறியீடுகள் (One-Time Passwords), மற்றும் தனிப்பட்ட ரகசியத் தரவுகள் (Personal Data) ஆகியவற்றைச் சைபர் குற்றவாளிகள் மிக இலகுவாகத் திருடி, அவர்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர்.
இவ்வாறான போலியான செய்திகள் குறித்து வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசரப் பதில் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
அரசாங்கம் அல்லது பொலிஸ் தரப்பிலிருந்து வருவது போன்ற குறுஞ்செய்திகள் கிடைத்தால், அதில் உள்ள சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (Links) ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தங்களது வங்கி அட்டை விபரங்கள் மற்றும் OTP குறியீடுகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.













