அம்பாறை, இறக்காமம் பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான மௌலவி (இஸ்லாமிய மதபோதகர்) கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொலிசாரின் தகவல்களின்படி, 14 வயது சிறுமிக்கு எதிரான இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, எரகம பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபரான மௌலவி தப்பியோடி தலைமறைவாகியிருந்தார்.
இறக்காமம் பொலிஸார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று அவர் தனது சட்டத்தரணி ஒருவரின் ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சரணடைந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபரான மௌலவியை ஜூன் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இக்கொடூர குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும், பிரதான சந்தேகநபருக்கு உதவியளித்ததாகவும் கூறப்படும் 21 வயதுடைய மற்றொரு மௌலவியும் எரகம காவல்துறையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரும் தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எரகம காவல்துறையினர் மிக தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

















