இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் கீழ், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் “ஒற்றை நோயாளி அறிக்கை” எனும் ஒருங்கிணைந்த மருத்துவப் பதிவு முறையைக் கொண்டு வருவதற்கான புதிய திட்டங்கள் குறித்துப் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதன்முறையாக விவாதித்துள்ளனர்.
பொது மருத்துவர்கள் , மருத்துவமனைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் தரவுகளை ஒன்றிணைத்து, முழுச் சுகாதாரக் கட்டமைப்பையும் ஒரே டிஜிட்டல் குடையின் கீழ் கொண்டு வருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தற்போதுள்ள நடைமுறையில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, இந்த புதிய தளம் நன்மைகளை வழங்கவுள்ளது.
நோயாளிகள் ஒவ்வொரு முறை மருத்துவச் சந்திப்பிற்குச் செல்லும் போதும், தங்களது முந்தைய மருத்துவ வரலாற்றை மீண்டும் விளக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்களால் இனி நோயாளிகளின் ஒட்டுமொத்த மருத்துவப் பின்னணி, அவர்கள் உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் அலர்ஜி விபரங்களை ஒரு சில நொடிகளில் சரிபார்க்க முடியும்.
ஆபத்தான நிலையில் உள்ள ஒரு நோயாளியை அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போதே, அவரின் முழு விபரங்களையும் பாரா மருத்துவ ஊழியர்கள் வௌிப்படையாகப் பார்க்க முடியும்.
இங்கிலாந்தின் சில பகுதிகளில் தற்போது இத்தகைய தரவுப் பகிர்வு ஓரளவிற்கு நடைமுறையில் உள்ள போதிலும், நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பிலும் ஒரே சீரான தன்மையை உறுதி செய்யவே இந்த புதிய திட்டம் கொண்டு வரப்படுகிறது.
இந்த அதிநவீன புதிய மருத்துவத் தரவு முறைமை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.














