இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐராவத்’ (INS Airavat) என்ற ஷர்துல் ரக தரையிறக்கக் கப்பல் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று ( 01) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இவ்விஜயம் இன்று முதல் ஜூன் மாதம் 4ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளதுடன், இக்கப்பல் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் ஒரு கட்டமாக, இந்திய அரசாங்கத்தின் முழுமையான மானிய உதவியின் கீழ், இந்தியக் கடலோரக் காவல்படையால் வழங்கப்பட்ட விசேட உதிரிப்பாகங்களை இக்கப்பல் ஏந்தி வந்துள்ளது.
இலங்கைக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ‘சுரக்ஷா’ (SLCGS Suraksha) கப்பலுக்கு அவசரமாகத் தேவைப்படும் அத்தியாவசிய உதிரிப்பாகங்களே இவ்வாறு இந்தியாவினால் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளன.
கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இந்தியக் கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் ஐ.பி. பாட்டீல் , இலங்கையின் மேற்கு கடற்பரப்பு கட்டளை அதிகாரியை நேரில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இரு நாட்டு கடற்படை வீரர்களுக்கும் இடையிலான பரஸ்பரத் திறன்களை வளர்க்கும் நோக்கில் கூட்டுப் பயிற்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியக் கடற்படை வீரர்கள் இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து கொழும்பு கடற்கரைப் பகுதியைத் தூய்மைப்படுத்தும் விசேட சிரமதானப் பணியிலும் கூட்டுறவாக ஈடுபடவுள்ளனர்.
இதற்கு முன்னர், இதே ரகத்தைச் சேர்ந்த இந்தியக் கடற்படைக் கப்பலான ‘ஐஎன்எஸ் கரியால்’ (INS Gharial), கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ கடுமையான சூறாவளியின் போது, 650 தொன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, அப்புயலினால் சேதமடைந்த பாலங்களை மீண்டும் புனரமைப்பதற்காக, கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் 10 பெய்லி பாலங்களையும் (Bailey bridges) அக்கப்பல் இலங்கைக்குக் கொண்டுவந்து உதவியிருந்தது.
இந்தியக் கடற்படைக் கப்பல்களின் இந்தத் தொடர்ச்சியான இலங்கை விஜயமானது, இந்தியாவின் ‘அண்டை நாட்டிற்கு முதலிடம்’ என்ற வெளியுறவுக் கொள்கை மற்றும் இந்தியப் பிரதமரின் ‘பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இரு நட்பு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.













