இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இன்று கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன் போது இந்தியாவின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட சுமார் 08 லட்சம் ரூபாய் பெறுமதியான குடிநீர் தாங்கியினை திறந்து வைத்தார்.
இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் நா,வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர், வடக்கு மக்களுடன் இந்தியா கொண்டுள்ள வரலாற்று ரீதியான உறவு தொடர்பில் கருத்துத் தெரிவித்ததுடன், இந்தப் பகுதி மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் நடைமுறைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
மன்னார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு அபிவிருத்தி, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் தனது உரையில் நினைவுகூர்ந்தார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, தூதரக அதிகாரிகள், ஆலய நிர்வாகத்தினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இந்திய துணைத்தூதுவர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையையும் பார்வையிட்டார்.














