நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி உட்பட இருவரை, ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (03) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
நீதிமன்றப் பிடியாணையில் இருந்து தப்பிக்கத் தலைமறைவாக இருந்த 36 வயதுடைய சந்தேக நபர், ஹெரோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
பொலிஸார் அச்சந்தேக நபரை முதன்முறையாகக் கைது செய்யச் சென்றபோது, அவர் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர்களின் பிடியில் இருந்து தப்பியோடினார்.
எனினும், பொலிஸார் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு மீண்டும் அவரை மடக்கிப் பிடித்தனர்.
இந்த மோதலின் போது, சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் இடது காலில் காயமடைந்ததுடன், அவருடன் சென்ற மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளார்.
இதேவேளை, அதே இரவில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், நீண்ட காலமாகப் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களைக் குறிவைத்து மிகவும் சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த 25 வயதுடைய மற்றொரு சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்த இரு சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைக்காக இன்று (04) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.













