அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் இன்று (29) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.
அத்துடன் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் சிறுமியின் கண்ணீர் மௌனமாகாது, மத ஆடையின் பின்னால் மறையும் குற்றங்களுக்கு நீதி வேண்டும், குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை வேண்டும், சிறார்களைக் காப்போம் குற்றங்களை நிறுத்துவோம், சிறார்களின் பாதுகாப்பு எங்கள் உரிமை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு அமைதிவழியில் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













