நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் கியூ.ஆர் முறையைப் பயன்படுத்த வேண்டிய, எவ்வித அவசியமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று பல மாவட்டங்களில் அதிகளவான வாகனங்கள் வரிசையில் நின்று எரிபொருட்களை கொள்வனவு செய்வதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
கிளிநொச்சி
இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் நகர பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டிருந்தது.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடானது கொள்கலன்களில் அதிகமான எரிபொருளை கொள்வனவு செய்ததன் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக வாகன சாரதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
கொள்கலன்களுடன் வருகை தருபவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சியுள்ள எரிபொருள் கூட்டுறவுச் சங்கத்தின் முகாமையாளர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
நுவரெலியா
இதேவேளை நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்று காலை தொடக்கம் மூடப்பட்டுள்ளன.
நுவரெலியாவிற்கு வாடகை முச்சக்கரவண்டியில் சுற்றுலா நிமிர்த்தம் வருகைந்தந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன் வரிசையில் காத்திருந்தனர்.
இஸ்ரேல், ஈரான் போர் பதற்றம் காரணமாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் இன்றும் இரண்டாவது நாளாகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மேலும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் நானுஓயா மற்றும் நுவரெலியாவில் சில நிலையங்களில் இங்கு பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பு காட்சிபதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.













