நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பைத் தடுக்கத் திமுக திட்டமிட்டு வன்முறையை ஏவிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட தங்கள் கட்சியினர் மீதே காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.
இந்த அநீதிக்கு எதிராகத் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை டிஜிபி நீதி வழங்க வேண்டும் எனவும், பொய் வழக்குகளை ரத்து செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
















