ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்வதற்காக இஸ்ரேல் முன்னெடுத்த அதிரடித் திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெஹ்ரானின் சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமரா கட்டமைப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இஸ்ரேலின் ‘மொசாட்’ (Mossad) அமைப்பின் ‘8200’ பிரிவு, கமேனியின் அன்றாட நடமாட்டங்கள் மற்றும் பாதுகாவலர்களின் பணி மாற்ற முறைகள் உள்ளிட்ட நுணுக்கமான தரவுகளைத் திருடி ஒரு தரவு வலைப்பின்னலை உருவாக்கியுள்ளது.
தாக்குதல் நடந்த அன்று தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்து, உளவாளிகளின் உதவியுடன் திட்டத்தைச் செயல்படுத்திய இஸ்ரேல், தாக்குதல் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே கமேனியை கொ*லை செய்துள்ளது.
இந்தத் திட்டம் குறித்துப் பேசிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், கமேனியைக் கொல்லும் முடிவு கடந்த ஆண்டு நவம்பரிலேயே எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னரே இது உறுதிப்படுத்தப்பட்டது.
ஈரானில் வெடித்த போராட்டங்கள் மற்றும் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சந்தேகத்தினால் இத்திட்டம் முன்கூட்டியே செயல்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கமேனியின் நிலத்தடி இராணுவப் பதுங்கு குழியை இஸ்ரேலிய விமானங்கள் அழிக்கும் காணொளிகளும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் போர் தொடங்கி இன்றுடன் ஒரு வாரம் நிறைவடையும் நிலையில், 40 ஆண்டுகள் ஈரானை ஆட்சி செய்த கமேனி உட்பட இதுவரை 1,332 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானிய செம்பிறை சங்கத்தின் தகவல்படி, 3,090 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன, சுமார் 600 பொதுநல மையங்கள் சேதமடைந்துள்ளன, கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதேவேளை, இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்துத் தெரிவிக்கையில், ஈரானின் அடுத்த தலைவரைத் தனது விருப்பப்படியே நியமிக்கப் போவதாகவும், கமேனியின் மகனைத் தலைவராக ஏற்பதற்குத் தான் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஈரானிய இராணுவத்தினர் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுச் சரணடையுமாறு அவர் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் முதன்முறையாக ‘கொரம்ஷார்-4’ (Khorramshahr-4) வகை ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது.
2,000 கிலோமீட்டர் தூரம் பாயக்கூடிய, 1.5 டன் வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள் ஒரே நேரத்தில் பல இடங்களைத் தாக்கும் வல்லமை கொண்டவை.
இருப்பினும், இந்தத் தாக்குதல்களால் தங்களுக்குப் பெரிய பாதிப்புகள் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
















