பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக்கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்துள்ள போராட்டம் எதிர் வரும் வியாழக்கிழமை (11) காலை மன்னார் நகரில் இடம்பெற உள்ள நிலையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இன்று (8) மதியம் ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை தலைவர் பா.ஜேக் குமார்,கட்சியின் செயலாளர் ப.ஜஸ்ரின் துரம்,கட்சியின் மாந்தை மேற்கு பிரதேச கிளை செயலாளர் ஐ.கனேச பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போதே குறித்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதன் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,,,
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சி மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை காலை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.
குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எமது இளைஞர்கள் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
எனவே கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி வேண்டியும்,பயங்கரவாத தடைச்சட்டத்தை இந்த நாட்டிலே இல்லாது செய்து சமமான நீதியை வழங்கக்கூடிய ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
எனவே மாவட்டத்தில் உள்ள தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள்,பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள்,வர்த்தகர்கள்,சர்வமத தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்க வேண்டும்.
இப்போராட்டம் அரசுக்கு பாரிய அழுத்தத்தை கொடுத்து குறித்த இளைஞரின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும் என்பதோடு,குறித்த சட்டமும் மாற்றப்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.













