உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எமது உரிமைகளைப் பெறுவோம்: இன்பராசா!

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மக்களுக்கான சேவைகளையும் எமது உரிமைகளையும் பெறுவதற்கு ஆரம்பித்துள்ளோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.
சம்பூர் கடற்கரைச்சேனை பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“முப்பது வருட காலங்களில் கிடைக்கப்பெறாத உரிமைகளை ஜனநாயக வழி நீரோடத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் மூலமாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மக்களுக்கான சேவைகளையும் எமது உரிமைகளையும் பெறுவதற்கு ஆரம்பித்துள்ளோம்.
கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் போது போராளிகளாகிய நாம் எமது வட கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கான உரிமைகளுக்காகவும் இன்னோரன்ன தேவைகளுக்காகவும் போராடி பல நூற்றுக்கணக்கான உயிர்களையும் விழுப்புண்களையும் உடலில் சுமந்துள்ளோம்.
இருந்தும் தற்போது எமது உறவுகளுக்கான உரிமைகளை ஜனநாயக ரீதியாக மக்கள் மத்தியில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நோக்கில் கொள்கை அடிப்படையில் இணைந்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
எந்த முன்னேற்றமும் அபிவிருத்திகளும் நடைபெறவில்லை யுத்தம் முற்றுப் பெற்ற பின்னரும் அபிவிருத்தியில் எமது பிரதேசம் கூடுதலாக புறக்கணிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பலர் இருந்தும் எமது பிரதேசம் கவனிப்பார் அற்று இருக்கின்றது.
இதற்கு ஒரு வழி உரிமைகளுக்காக போராடிய நாம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் கிராம மட்டங்களில் உள்ள அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.