பொலிஸாருக்குப் பயந்து குளத்தில் குதித்த இளைஞன் உயிரிழப்பு!
முல்லைத்தீவில் பொலிஸார் துரத்திச்சென்றபோது தப்பிக்கும் நோக்கில் குளத்தில் குதித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் குரவில் உடையார்கட்டு தெற்குப் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மகேஸ்வரன் ராமகிருஸ்ணன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருவதாவது, இடைக்கட்டு குளத்தின் அலைகரைப் பக்கம் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை தடுக்கும் முகமாக பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது அலைகரையில் நின்ற 3 நபர்களை பொலிஸார் கண்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களை பொலிஸார் துரத்தி சென்ற போது மூவரும் குளத்து நீரினுள் விழுந்து தப்பி ஓடியுள்ளனர். பொலிஸார் அவர்களைத் துரத்தும் போது இருவர் நீந்தித் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். மற்றுமொருவர் நீந்தி தப்பித்துள்ளதுடன், மூன்றாம் நபர் நீந்தமுடியாது பொலிஸாரிடம் மீள வந்து சரணடைந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த இளைஞன் மூழ்கிய இடத்தை காட்டிவிட்டு சரணடைந்தவரையும் விட்டுவிட்டு பொலிஸார் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் இரண்டு மணிக்கு நீரில் மூழ்கியவரை மாலை 6 மணியளவில் அயலவர்கள் தேடி மீட்டபோதும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தராததால் அங்கு குழப்பநிலை தோன்றியது.
இந்த நிலையில் அங்கு வருகை தந்த வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் பொலிஸாருக்கு தகவல் வழங்கி இரவு 8 மணியளவிலேயே குறித்த பகுதிக்கு பொலிஸார் வருகை தந்து சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றதுடன், சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.